Monday, June 24, 2019

புனைவின் வழி


நான்கைந்து முள்மரங்களும் சில செடி-கொடிகளும் புதர்களும் என் காடாயிருந்தது.  விடுமுறை நாளின் இதமான காலையும் வெப்பமான மதியமும் அதனுள் கழிந்தது.  சிறிய அய்ந்து இதழ்கள் கொண்ட மஞ்சள் மலர்கள்.  தம்மிடத்தில் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்ட இந்த புதிய பிராணியை அசையாது கண்ணோக்கி விட்டு தலையாட்டிக் கொள்ளும் ஓணான்.  சில சமயம் சிறு குருவிகள் தெரியாமல் உட்புகுந்து மிரண்டு ஓடிவிடும்.  நாய்கள் அப்பகுதியில் அப்போது இல்லை.  அங்கு பாம்பு இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறேன்.  ஆனால் அன்று அது என்னை அச்சமுட்ட போதுமானதல்ல.


எப்போதும் சிறியது பெரியதாக விரிவாக்கப்படுகிறது.  பெரியது மேலும் பெரியதாக.  கற்பனை எல்லையில்லாது விரிவது.  அடிப்படை இயல்பாகவும் மாபெரும் சாத்தியமொன்றின் குறிப்புணர்த்தலாகவும் அது இருக்கிறது.

சிறுமரமாகிய நான் மிகப்பெரிதாகிறேன்.  என் கிளைகள் விண்ணில் விரிவடைந்து செல்கின்றன.  வேகக்காற்று என் கிளைகளை ஒடித்துவிட இயலாதவாறு அவை வலிமை பெற்றுவிட்டன.  இதோ நான் புவியின் திசை வரம்புகளை கடந்துவிட்டேன்.  புவியின் ஈர்ப்பு விசையின் எல்லைகள் கடந்து என் கிளைகள் விண்ணில் தவழ்ந்தாடத் தொடங்கிவிட்டன, புவி தன் கரம் நீட்டி விண்ணில் துழாவுவது போல்.  நான் பழகிய இடத்தின் காற்றும் கதிரொளியின் தேவையும் கூட இனி எனக்கில்லை.  விட்டு விடுதலையாகி விட்டேன்.

ஆனாலும் வேர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதா?

நிச்சயமாக அதிலென்ன அய்யம்? இனி நான் செல்லும் உலகங்கள் புதியவை. 

வேர்களின் தொடர்பறுந்த நீ இறந்துவிட மாட்டாயா?

அது பரவாயில்லை.  என்னிடம் விதைகள் இருக்கின்றன.  புதிய உலகில் அவை விழுந்து நான் புதிதாக எழுவேன்.  அங்கு காற்றும் வெப்பமும் வேறாக இருக்கலாம், உணவென உயிரோட்டம் என இருப்பவை வேறுபடலாம்.  நான் புத்துயிராய் அங்கிருப்பேன்.

நீ உன் விதைகளை அங்கு கொண்டு செல்கிறாய்

ஆம்.  விதைகளுக்குள் விண்வெளி இருக்கிறது என்பதும் விதைகள் விரிந்தே விண்வெளி ஆகியிருக்கிறது.  இரண்டும் உண்மை.

நடந்த பாதைகளிலேயே நடப்பது அலுப்பூட்டக் கூடியதுதான்.  ஆனால் பாதை தன்னை கணம் தோறும் புதுப்பித்துக் கொள்கிறது.  புதுப்பித்துக் கொள்வதன் கலையை நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ராமாயணத்துக்கு வெளியே ராமனும் பைபிளுக்கு வெளியே ஏசுவும் வரமுடியுமா? ஒரேவிதமாக மீண்டும் மீண்டும் அதையே என்றல்லாமல் அவர்களை சந்திக்க முடியுமா? முடியும் இரண்டு வழிகள் இருக்கின்றன.  கலையுணர்வும் நேர்மையும் இல்லாத ஒருவழி, ”இன்று காலை அவரை சந்தித்துப் பேசியபோது இந்த தேர்தலில் இந்த கட்சிதான் ஜெயிக்கும்” என்று சொன்னார் என்று சொல்வது போன்ற வழி.  மற்றொரு வழி கலையில் உள்ளார்ந்த அன்பிலும் உவகையிலும் உண்மை கொண்ட புனைவின் வழி.

பிறகு எல்லாம் மிகப்பெரிதாகிவிடுகிறது.  அவர்கள் எங்கும் நிகழக்கூடியவர்கள்தான்.

No comments:

Post a Comment